வெள்ளி, ஏப்ரல் 18, 2014

மோடி பிரதமராவதை தடுக்க பா.ஜ.க தலைவர்கள் என்னை அணுகினர்: முலாயம்!

நரேந்திர மோடிக்கு பிரதமர் பதவி கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர் என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், "பாஜகவின் மூத்த தலைவர்களுள் பலர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இல்லை என்பதால் அவரால் நிச்சயம் பிரதமர் பதவியை அடைய முடியாது. அவர் பிரதமர் ஆவதைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும் எனக் கருதி அக்கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர்.
மோடி பிரதமர் ஆவதைத் தடுப்போம் என அவர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.
முன்னதாக மெயின்புரியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும். அந்த அணியில் சமாஜவாதிதான் பெரிய கட்சியாக இருக்கும் என்பதால் நான் பிரதமர் பதவிக்கு உரிமை கோருவேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக