திங்கள், ஏப்ரல் 21, 2014

கோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட MAS விமானம் தொழில்நுட்பக் கோளாறால் அவசர தரையிறக்கம்

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 'எம்.எச்.192' என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்தும் 'கியர்' செயலிழந்ததால் தொடர்ந்து நான்கு மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டபடி சுற்றிக்கொண்டிருந்தது. 

போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க 'லேண்டிங் கியர்' திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது.

இந்நிலையில், இதை கவனித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த விமானம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தகவல் வழங்கியதை தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

சமீபத்தில் எம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக