வியாழன், மே 08, 2014

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தை

டென்னில் உலகில் முடிசூடா மன்னனாக வலம் வருபவர், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை (17 பட்டம்) வென்ற சாதனையாளர் இவர் தான். முன்னாள் நம்பர் ஒன் வீரரான அவர் இப்போது உலக தரவரிசையில் 4–வது இடத்தில் உள்ளார்.
32 வயதான ரோஜர் பெடரர், சக அணிக்காக விளையாடிய வீராங்கனை மிர்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிர்கா, பெடரரை விட 4 வயது மூத்தவர். கணவரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மிர்கா, பெடரர் விளையாடும் மைதானங்களுக்கு நேரில் சென்று ஊக்கப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
பெடரர்–மிர்கா தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் சார்லின்–மைலா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, மிர்கா மீண்டும் கர்ப்பமானார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பெடரர் கடைசி நேரத்தில் விலகினார்.
இந்த நிலையில் மிர்காவுக்கு நேற்று முன்தினம் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘எங்களுக்கு லியா–லென்னி என்ற இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த எல்லையில்லா மகிழ்ச்சியை நானும், மிர்காவும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்’ என்று பெடரர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். குழந்தை பிறந்து விட்டதால், வருகிற 25–ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெடரர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக