புதன், மே 14, 2014

வாரணாசி: முஸ்லிம் பகுதிகளில் 6 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுப்பு!


16-வது மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்த வாரணாசி மக்களவை தொகுதியில் 6 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
பிலிகோத்தியில் உள்ள நேசனல் இண்டர் காலேஜ் வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த 6 ஆயிரம் முஸ்லிம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது.வாக்களிக்க வந்தவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பினர்.இதனைத்தொடர்ந்து வாக்குரிமை மறுக்கப்பட்ட முஸ்லிம்கள் ஆதம்புரா காவல் நிலையம் மற்றும் வாக்குச்சாவடியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கமிட்ட மக்கள், தங்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் நடத்திய தடியடியில் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
சிறுபான்மை சமூகத்தினர் அதிகமாக வாழும் இன்னொரு பகுதியான மதன்புராவில் இதே போன்று முஸ்லிம் வாக்காளர்கள் ஏராளமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தன. பலரும் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்கு வந்தபிறகு அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.மேலும் சிலருடைய வாக்குகள் அவர்கள் வருவதற்கு முன்பு பதிவுச் செய்யப்பட்டிருந்தன.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தவர்கள் ஆவர்.
முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.கவின் கரங்கள் இருப்பதாக வாக்குரிமை மறுக்கப்பட்ட வாக்காளர்கள் குற்றம் சாட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக