புதன், மே 14, 2014

உக்ரைனில் 7 ராணுவ வீரர்களை கொன்ற கிளர்ச்சியாளர்கள்: மீண்டும் பதட்டம்

உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்தபிறகு, கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்களும் தனி நாடு கோரி வருகின்றனர். இதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று 7 உக்ரைன் அரசு படை வீரர்களைக் கொன்றனர். இதையடுத்து உக்ரைனில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
உக்ரைன் அரசாங்கமும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக ஜெர்மன் வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் வந்துள்ள நிலையில் இந்த வன்முறை நடந்துள்ளது. 

உக்ரைன் பதட்டத்தை தணிக்கும் நோக்கத்தில் கிழக்கு-மேற்கு பாதுகாப்பு அமைப்பான ஓஎஸ்சிஇ ஒரு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரஷ்யா முக்கியத்துவம் கொடுத்தபோதிலும், கிளர்ச்சியாளர்கள் அமைதிப் பேச்சுக்கு இணங்கி வருவதால் அரசு ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. உக்ரைனின்மேற்கத்திய ஆதரவு அதிகாரிகள் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்துவது, ஆயுத குறைப்பு, தேசிய பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே அரசு, பாராளுமன்றம் மற்றும் பிராந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் வட்டமேஜை கூட்டத்திற்கு உக்ரைன் அரசு ஏற்பாடு செய்துளள்து. இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில், எந்த பிரிவினைவாத பிரதிநிதிகளும் அழைக்கப்படவில்லை.

கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லூகான்ஸ்க் மாகாணங்களில் சமீபத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக