வெள்ளி, மே 02, 2014

மோடியை எதிர்த்து வாராணாசி தொகுதியில் துவாரகை, பூரி சங்கராச்சாரியார்கள் பிரச்சாரம்!

மோடிக்கு எதிராக 2 சங்கராச்சாரியார்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜவினர் ஹர ஹர மோடி என கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, துவாரகை பீடம் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இவரும், பூரி சங்கராச்சாரியார் அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத்தும் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து பூரி சங்காராச்சாரியார் நேற்று அளித்த பேட்டியில், குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம். மதவாதத்தால் நாட்டையே பிரிக்கக் கூடியவர் அவர். அதனால், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மதச்சார்பற்ற கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நோக்கம் என்றார்.
துவாரகை சங்கராச்சாரியார் கூறுகையில், என்னால் முடியாவிட்டாலும், மோடியின் வெற்றியை கடவுள் தடுப்பார் என கூறியிருக்கிறார். தற்போது துவாரகை சங்காராச்சாரியார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது சீடர் சுவாமி முக்தீஸ்வரானந்த் பிரசாரம் செய்வார் என கூறப்பட்டுள்ளது. மோடிக்கு எதிராக 2 ஆன்மிகத் தலைவர்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக