வெள்ளி, ஏப்ரல் 18, 2014

புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மரணம்!

புகழ் பெற்ற கொலம்பிய எழுத்தாளரும், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவருமான, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மரணமடைந்தார். அவர் மெக்சிகோ சிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலம்பிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.


அவருக்கு வயது 87.
ஸ்பானிய மொழியில் எழுதிய நாவலாசிரியர்களில் புகழ்பெற்ற மிகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், "நூறாண்டு காலத் தனிமை" (ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஒப் சாலிட்டியூட்) என்ற மாஜிக்கல் ரியலிச பாணி புதினத்தால் உலகப் புகழ் பெற்றவர்.
1967ல் எழுதப்பட்ட இந்தப் புதினம் உலகெங்கும் 3 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றது. 1982ல் அவர் நோபல் பரிசைப் பெற்றார்.
சமீபத்தில் அவர் நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவர் மெக்சிகோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலான காலம் வாழ்ந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக அவர் பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தோன்றுவதைப் பொதுவாகத்
தவிர்த்து வந்தார்.
"காலரா காலத்தில் காதல்" ( லவ் இன் டைம்ஸ் ஒப் காலரா) " ஒரு மரணத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்ட கதை" (க்ரோனிக்கில் ஒப் எ டெத் போர்டோல்ட்") மற்றும் "சந்து பொந்துகளில் சிக்கிய ஜெனரல்" ( தெ ஜெனெரல் இன் ஹிஸ் லேபிரிந்த்") ஆகியவை அவர் எழுதிய நூல்களில் மற்றவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக