புதன், ஏப்ரல் 16, 2014

ஐ.பி.எல். வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவராக தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஒலி நாடாவை தங்களிடம் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது நீதிமன்றம் கூறியதாவது: "ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவராக தொடர முடியாது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீதான விசாரணையை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளை கண்டும் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. ஐபிஎல் சீசன்-7 போட்டிகளுக்கு தலைமை செயல்பாட்டு அதிகாரியாக தொடர சுந்தர் ராமனுக்கு அனுமதி வழங்கப்படுகிறது". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சுந்தர்ராமன் தொடர பீகார் கிரிக்கெட் வாரியம் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பிசிசிஐ இடைக்கால தலைவர் காவஸ்கார், சுந்தர்ராமன் ஐபிஎல் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக தொடர ஆட்சேபனை தெரிவிக்காததால் சுந்தர் ராமனுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக