செவ்வாய், ஏப்ரல் 29, 2014

ரஷ்யா மிது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் புதிய பொருளாதார தடை விதித்தன

உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தனர். 
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அளித்த ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது. 

'ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன் எல்லையில் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சர்வதேச உடன்படிக்கைக்கு ரஷ்யா இணங்க மறுத்துவிட்டதால் அதனை தண்டிக்கும் நோக்கத்தில் இந்த புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன.' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

வரும் திங்கட்கிழமைக்குள் இதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்  ஜி-7 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். 

இதற்கிடையில், உக்ரைனுக்கு சொந்தமான இன்னொரு நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ஆதரவு படைகள் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைன் கவர்னர் ஒருவரும் நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டார். அதிர்ஷ்டவசமாக குண்டு முதுகில் பாய்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். 

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமான பிரபல பெட்ரோலிய உற்பத்தி தொழிற்சாலை உள்பட 17 நிறுவனங்கள் மற்றும் 5 ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. 

ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவின் 15 நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையால் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பின் வாங்குமா? அல்லது, மேலும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுமா? என்பதை சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக