சனி, ஏப்ரல் 19, 2014

பெண் போலீஸ் சர்மிளா பானு மர்ம மரணம்; சி.பி.ஐ. விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

நத்தத்தை சேர்ந்த பெண் போலீஸ் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மகள் சர்மிளா பானு (வயது 21). இவர் சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 15&ந்தேதி சென்னையில் இருந்து சிக்கந்தருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் உங்கள் மகளுக்கு விபத்து ஏற்பட் டுவிட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு வாருங்கள் என்று கூறினார்.
இந்த தகவல் கிடைத்தவுடன் சிக்கந்தர் தனது மனைவி, மற்றொரு மகள், உறவினர்களுடன் சென்னைக்கு சென்றார். அங்கு போனில் பேசியவர் கூறிய தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் சர்மிளா பானு இல்லை. பின்னர் அவர்கள் அங்கு விசாரித்தனர். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் சர்மிளா பானு இருப்பதாக தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் உங்கள் மகள் இறந்துவிட்டார். இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு, உடலை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.
இதில் அதிர்ச்சி அடைந்த சிக்கந்தர் கதறி அழுதார். பின்னர் சென்னையில் இருந்து போலீஸ் வேன் மூலம் சர்மிளா பானு உடல் நத்தம் கோட்டையூருக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. சர்மிளா பானு காதல் தோல்வியால் தற்கொலை செய்து விட்டார் என்று சென்னை போலீசார் தரப்பில் கூறியதாக தெரிகிறது.
நேற்று காலையில் சிக்கந்தரின் மகள் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்ட ஊர்க்காரர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள், சர்மிளா பானுவின் சாவில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்மிளா பானுவின் உடலுடன் நத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண் டானாவில் மறியல் போராட்டமும் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் சர்மிளா பானு உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் சர்மிளா பானுவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, ஷர்மிளாபானுவின் தந்தை சிக்கந்தர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:
என் மகள் ஷர்மிளாபானு, சென்னை மவுண்டு ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த 14&ந் தேதி எனது மூத்த மகள் ஜமீமாபானுவின் செல்போனில் பேசிய நபர், ஷர்மிளாபானு விபத்தில் சிக்கிக் கொண்டதாகவும், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார். இதனால், நான் சென்னைக்கு சென்றேன். அப்போது, எனது மகள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். காதல் தோல்வியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி என்னிடம் கையெழுத்து போடும்படி கூறினர். அதற்கு நான், மறுத்தேன். போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் என்னை மிரட்டி கையெழுத்து பெற்றார். அதன்பின்பு, பிரேத பரிசோதனை செய்து எனது மகளின் உடலை என்னிடம் ஒப்படைத்தனர். எனது மகளின் பிரேதத்தை பார்த்த போது சில இடங்களில் காயம் இருந்தது. எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர்ரமேஷ்குமார், சி.எம்.ஆறுமுகம், முகமது அப்பாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். விசாரணையின் போது அரசு வக்கீல், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மறு பிரேத பரிசோதனை நடத்தும் போது வீடியோ எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக