வெள்ளி, மே 25, 2012

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – ஈரான் !

Representatives of the P5+1 group meet with Iran's negotiating team (R) in Baghdadபாக்தாத்:ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி மேற்கத்திய நாடுகள் தடைகளை தீவிரப்படுத்தி வரும் வேளையில் பாக்தாதில் ஐந்து வல்லரசுகள் மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகியநாடுகளுடன் ஜெர்மன் பிரதிநிதியும்
பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ளார்.
பி5+1 என சுருக்கமாக அழைக்கப்படும் வல்லரசு நாடுகளின் பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை காதரின் ஆஷ்டன் ஆவார். ஈரானின் சுப்ரீம் நேசனல் செக்யூரிட்டி கவுன்சில் தலைவர் ஸஈத் ஜலீலி ஈரான் பிரதிநிதிக் குழுவிற்கு தலைமை வகிக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக அவர் ஈராக் அதிபர் ஜலால் தலபானி, ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி ஆகியோருடன் பேச்ச்வார்த்தை நடத்தினார். புதன் கிழமை நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இன்றும் பேச்சுவார்த்தை தொடருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாக்தாதில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், இரு பிரிவினருக்கும் இடையேயான கருத்தொற்றுமைக்கு எதிராக ஈரானின் மீது கடுமையான அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் கூறுகின்றன.
இதன் அடிப்படையிலேயே நேற்று முன் தினம் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் யூகியோ அமானோ டெஹ்ரானுக்கு வருகை தந்தார். பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக பிரிட்டனில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் சிறப்பு கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக புதிய அழுத்தங்களை கொடுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹி தெரிவித்துள்ளார்.
ஈரான் அமைதியான காரணங்களுக்காகவே அணுசக்தி தயாரிக்கிறது. இதில் பின்வாங்க மாட்டோம். ஆனால், பாக்தாத் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் என டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக