வியாழன், மே 31, 2012

வெளிநாட்டு நிதி விவகாரம்: அன்னா ஹசாரே குழு மீது சி.பி.ஐ. விசாரணை- மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு !

வெளிநாட்டு நிதி விவகாரம்: அன்னா ஹசாரே குழு மீது சி.பி.ஐ. விசாரணை-  மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவுஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, அன்னா ஹசாரே குழுவினர் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார்..
இந்த போராட்டத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அன்னா ஹசாரே குழுவினர் நிதி திரட்டியதாக அப்போது சொல்லப்பட்டது.
 
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் மனோ கர்லால் சர்மா டெல்லி ஐகோர்ட்டில், ஹசாரே குழுவுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் அன்னா ஹசாரே குழுவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்காக, வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியுள்ளனர்.
 
வெளிநாடுகளில் நிதி திரட்ட வேண்டுமானால், சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், ஹசாரே குழுவினர் அப்படி செய்யவில்லை.
இது அன்னிய நிதியளிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.
 
ஹசாரே குழுவினருக்கு நிதி அளித்த வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியலையும் மனுவுடன் அவர் இணைத்திருந்தார். அந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி ஏ.கே. சிக்ரி, நீதிபதி ராஜீவ் சஹாய் என்ட்லா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.எஸ். சாந்தியோக் ஆஜரானார். அப்போது, அன்னா ஹசாரே குழுவின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து, மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுத்து பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் நகல் ஒன்றை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு, மனுதாரரான வக்கீல் மனோகர்லால் சர்மாவுக்கு ஆலோசனை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக