வியாழன், மே 31, 2012

பத்திரிகையாளர் சோலை மரணம் !

பத்திரிகையாளர் சோலைசென்னை:தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சோலை மரணமடைந்தார். அவருக்கு வயது 81. திண்டுக்கல் மாவட்டம் அய்யன் பாளையத்தில் பிறந்தவர் சோலை. அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதுவதில் தனக்கென ஒரு இடத்தை பதிவுச் செய்தவர். பிரபல வார இதழான நக்கீரன் உட்பட பல்வேறு இதழ்களில் பரபரப்பு கட்டுரைகள் எழுதியவர்.துவக்கத்தில் கம்யூனிஸ்ட்டாகவும், பின்பு எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும் விளங்கியவர். மேலும் அதிமுக பொதுச் செயலாளரும்,
முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சில காலம் அரசியல் ஆலோசகராக இருந்தார். பின்பு திமுக தலைவர் கலைஞருடன் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரானார்.
சென்னையில் வசித்து வந்த சோலைக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு அவர் தனது இல்லத்தில் காலமானார்.
சோலையின் உடல் அவரது இல்லத்தில்(எண் 11, தொல்காப்பியர் தெரு, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர், சென்னை-63) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மின்சார மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
சோலை மறைவுக்கு தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக