திங்கள், மே 21, 2012

நிலஒதுக்கீட்டு ஊழல்: தாக்கப்பட்ட அதிகாரி மரணம்!

பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் வீடு நிர்மாண கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதால் தாக்கப்பட்ட தணிக்கை பிரிவு அதிகாரி மகந்தேஷ் மருத்துவமனையில் சிகிட்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகந்தேஷ்(42). இவர் கர்நாடக கூட்டுறவுச் சங்கத்தில் தணிக்கைத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பெங்களூர் சாமாராஜ் பேட்டையில் மனைவி பூர்ணிமாவுடன் வசித்து வந்தார்.

அரசியல்வாதிகளுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் நில ஒதுக்கீடு செய்ததில் வீட்டு நிர்மாண கூட்டுறவு சங்கங்கள் பெரும் முறைகேடுகளை புரிந்துள்ளதை மகந்தேஷ் கண்டுபிடித்தார்.
இந்நிலையில் மகந்தேஷ் கடந்த 17-ம் தேதி சககார நகர் கூட்டுறவு சங்கத்தில் ஆவணங்களை சரிபார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஹைகிரவுண்ட் காவல் சரகத்தில் உள்ள அரண்மனை சாலையில், மற்றொரு வாகனத்தில் வந்த கும்பல் மகந்தேஷ் வந்த காரை வழிமறித்தது. மேலும், அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பியது.
இதில் பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அவர் சிகிட்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். மகேந்தஷின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மகேந்தஷை தாக்கியவர்கள் குறித்து தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், காலதாமதமின்றி அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணைக் கமிஷனர் பி.ஆர்.ரவிகாந்த் கவுடா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அரசு கண்காணிப்பில் உள்ளன. ஊழலை கண்டுபிடித்த அரசு அதிகாரி தாக்கப்பட்டு பல தினங்கள் கழிந்த பிறகும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் காவல்துறையில் கையாலாகத்தனத்தால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
மகந்தேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் சதானந்த கவுடா வருகை தந்தபொழுது அங்கு கூடியிருந்த மக்கள் பா.ஜ.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய கவுடா, உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக