செவ்வாய், மே 22, 2012

எய்ம்ஸில் சாதி பாகுபாடு: பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் எதிர்ப்பு!

புதுடெல்லி:மருத்துவத்துறையில் இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமாக கருதப்படும் ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸில்(எய்ம்ஸ்) எஸ்.சி-எஸ்.டி பிரிவினர் மற்றும் ஒ.பி.சி பிரிவினரிடமும் உயர்ஜாதி டாக்டர்கள் சாதிபாகுபாடு காட்டுவதாக பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் குற்றம்சாட்டினர்.
ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் மங்கணிலால் மண்டல் பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் இப்பிரச்சனையை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
பல்வேறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது எய்ம்ஸில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டிய மண்டல், எஸ்.சி-எஸ்.டி, ஒ.பி.சி பிரிவைச் சார்ந்தவர்கள் எய்ம்ஸில் உணவு விஷயத்தில் கூட பாகுபாடு காட்டப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
மண்டலுக்கு ஆதராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி எம்.பி பி.எல்.பூனியா, சாதி பாகுபாட்டின் காரணமாக டாக்டர்கள் தற்கொலை வரை சென்றுள்ளனர் என்று தெரிவித்தார். இது வெட்கக் கேடானதாகும். இதுக்குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
எஸ்.சி-எஸ்.டி பிரிவைச் சார்ந்த 26 மாணவர்களில் 24 பேரையும் வேண்டுமென்றே தோற்கடித்த உ.பி மாநிலத்தில் உள்ள சத்ரபதி ஷாஹுஜி மஹராஜ் மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் நடப்பதாக பூனியா சுட்டிக்காட்டினார். இருவரின் கருத்துக்களையும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் தாராசிங் சவுகான் ஆதரித்தார்.
தகுதி மூலம் எய்ம்ஸிற்கு வரும் டாக்டர்கள் சாதி பாகுபாடு காரணமாக தற்கொலைச் செய்யும் சூழலுக்கு தள்ளபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இடஒதுக்கீடு என்பது டெல்லியில் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக சுயேட்சை எம்.பியான கிரோரி லால் மீனா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக