திங்கள், செப்டம்பர் 24, 2012

கஷ்மீரில் போராளிகள் ஊடுருவல்: மிகைப்படுத்தும் ராணுவ புலனாய்வுத்துறை – மாநில போலீஸ் குற்றச்சாட்டு !

ஸ்ரீநகர்:கஷ்மீரில் ஊடுருவும் போராளிகளின் எண்ணிக்கை பற்றிய ராணுவப் புலனாய்வுத் துறையின் தகவல் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என, கஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.கஷ்மீரில் அதிக எண்ணிக்கையில் போராளிகள் ஊடுருவுவதாக ராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. குறி ப்பாக, உரி பகுதியில் அதிகளவில்
ஊடுருவல் நடப்பதாகவும் ராணுவப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனை கஷ்மீர் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மறுத்துள்ளார். நடப்பாண்டில் மட்டும் 100 போராளிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் தகவல் மிகைப்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 24 போராளிகள் உரி பகுதியில் ஊடுருவி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது போலீஸார் அல்லது ராணுவத்தினரால் நிரூபிக்கப்படவில்லை. ஊடுருவல் எண்ணிக்கை குறித்து, ராணுவப் புலனாய்வுத்துறை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். இதுதொடர்பான நடைமுறையில் மாற்றம் தேவை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹஃப்ரூடா வனப்பகுதி, குப்வாரா மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையில், ஊடுருவலுக்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை. தேடுதல் வேட்டையில் ஆளில்லா உளவு விமானங்களும் பயன்படுத்தப்பட்டன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கஷ்மீர் போலீஸார், மாநிலத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள், புலனாய்வுத் துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருடன் தொடர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். எல்லையில் யாரும் ஊடுருவ இயலாத அளவுக்குப் பாதுகாப்பு உள்ள நிலையில், ஊடுருவல் பற்றிய ராணுவப் புலனாய்வுத் துறையின் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக