செவ்வாய், செப்டம்பர் 25, 2012

'ஏசி', அயர்ன் பாக்ஸ், ஹீட்டர் யூஸ் பண்ணாதீங்க...மின்வாரியத்தின் மற்றும் ஒரு பலே யோசனை !

சென்னை: மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான வழி வகை தெரியாததால், அதுகுறித்து யோசிக்க முன்வராமல், கரண்ட்டை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள், அட்வைஸ்களை நாள் தோறும் மின்வாரியம் மக்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. விளக்குகளை பயன்படுத்துவதை குறைக்குமாறு முதலில் கூறிய அதிகாரிகள் தற்போது
வீடுகளில் ஏசியை 2 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த அட்வைஸ் இப்போதைக்கு சென்னையில் வாழும் மக்களுக்குத்தான். தமிழகத்திற்கு தற்போதைய தேவையான 11,000 மெகாவாட் மின்சாரத்தில் 2,000 மெகாவாட் அதாவது 20 சதவீதம் மின்சாரம் சென்னை நகருக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 5-ல் ஒரு பங்கு சென்னை நகருக்கும், மீதம் உள்ள 4 பங்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.
மின்சார உற்பத்தி குறைந்த நிலையிலும் சென்னை நகருக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும் மின்நுகர்வோர்கள் சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக மின்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மின்சார வாரியத் தலைவர் ராஜுவ் ரஞ்சன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மின் உற்பத்தி, மின்விநியோகம், மின்பகிர்மானம் உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில்,
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் 1,905 மெகாவாட், புனல் மின்நிலையங்கள் மூலம் 370 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 150 மெகாவாட், தனியார் மின்நிறுவனங்கள் மூலம் 740 மெகாவாட், மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மூலம் 850 மெகாவாட், தேசிய அணுமின்கழகம் மூலம் 375 மெகாவாட், நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் 850 மெகாவாட், தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
ஆக 5,740 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது. அத்துடன் காற்றாலைகள் மூலம் சராசரியாக 2,900 உட்பட 8,140 மெகாவாட் மின்சாரம் தான் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் காற்றாலைகளை நம்ப முடிவதில்லை. 2900 என்பது 100 ஆகவும் குறைந்து விடுகிறது.
அதுவும் காற்றாலை மின்உற்பத்தி குறையும் காலம் நெருங்கி விட்டது. இதனால் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் 10 மணி நேரம் வரையிலும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
அயர்ன்பாக்ஸ் கூட யூஸ் பண்ணாதீங்க
எனவே சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஏ.சி., மின்சார அடுப்புகள், அயன்பாக்ஸ், ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்களை வரும் 2 மாதங்களுக்கு பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
இவ்வாறு செய்தால் சென்னை தவிர பிறமாவட்டங்களில் இருக்கும் நம்முடைய சகோதரர்களுக்கு மின்சாரம் கூடுதலாக வழங்க முடியும். சி.எப்.எல், மற்றும் எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்தி மின்சார சிக்கனத்தில் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை மின்சார வாரியத்திற்கு அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக