புதன், செப்டம்பர் 26, 2012

திருக்குர்ஆன், இஸ்லாமிய நூல்கள், பத்திரிகைகள் உங்கள் வசம் உள்ளதா? சிறைக்குச் செல்ல தயாராக இருங்கள் !

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது. தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும் கைப்பற்றி இவை
‘நாங்கள் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய ஆதாரங்கள்’ என்று போலீஸ் கூறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய அரசால் அநியாயமாக தடைச் செய்யப்பட்ட சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்களான அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க நீதிமன்றத்தில் போலீஸ் ஆதாரமாக இவற்றை தாக்கல் செய்துள்ளது. இத்தகவலை பிரபல ஆங்கில ஏடான த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
சிமி இயக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து பின்னர் மலேகான் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என குற்றம் சாட்டிய ஷபீர் அஹ்மத் மஸீஹுல்லாஹ் மற்றும் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்ட நஃபீஸ் அஹ்மத் ஆகியோரிடமிருந்து கைப்பற்றியது இத்தகைய புத்தகங்களாகும்.
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நஃபீஸ் மற்றும் ஷபீரை கைது செய்த பிறகு போலீஸ் நஃபீஸின் வீட்டில் சோதனை நாடகத்தை நடத்தியது. அப்பொழுது அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கறுப்பு ரெக்ஸின் பையில் இருந்தவை குழந்தைகளுக்கான மாத இதழ் உமங், சிமி தடைச்செய்யப்படுவதற்கு முன்பாக அந்த இயக்கத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் ஆகியனவாகும்.
2008-ஆம் ஆண்டு இந்தூரில் இருந்து சிமி உறுப்பினர் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட யூனுஸ் கானுக்கு எதிராக போலீஸ் தாக்கல் செய்த ஆதாரம், இந்தியாவில்    இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நிலைமையை விளக்கும் கட்டுரையாகும். சிமி தலைவர்களுக்கு நார்கோ அனாலிஸிஸ் (உண்மைக் கண்டறியும் சோதனை) டெஸ்ட் குறித்து 2008 ஏப்ரல்9-ஆம் தேதி தைனிக் ஜாக்ரன் பத்திரிகையும் இதனை ஆதாரமாக வெளியிட்டது. யூனுஸ் 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சோட்டி காவல் டோலி மஸ்ஜிதில் திருக்குர்ஆனை கற்றுக் கொடுத்தார் என்ற மிகப்பெரிய அதிர்ச்சி(???)யான தகவலும் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஃபைஸல், இர்ஃபான், ஷாக்கிர் ஆகியோருக்கு எதிராக தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய கட்டாயக் கடமைகள் குறித்து ஒரு முஸ்லிம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சட்டத்திட்டங்கள் அடங்கிய உருது புத்தகத்தை விசாரணை அதிகாரி விக்ரம்சிங் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
இந்தூரில் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் என்ன தெரியுமா? புதுடெல்லியில் ஒரு பதிப்பகம் வெளியிட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘லைஃப் ஆஃப் முஹம்மது’ என்ற நூலாகும். மேலும் ‘ஹிந்து மதமும் ஏகத்துவக் கொள்கையும்’, ‘திருக்குர்ஆனை கற்கும் முறை’ ஆகிய நூல்களும் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ஜாமீருக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் – ஹிந்து ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா அமைப்பின் வகுப்புவாத செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்கள் ஆகும்.
மஹாராஷ்ட்ராவில் ஃகாலித் முச்சாலாவுக்கு எதிரான ஆதாரம் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த புகாராகும். முஸ்லிம்-கிறிஸ்தவ மக்கள் தொகை சதவீதம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி ராஷ்ட்ரீய விசார் மஞ்ச் வெளியிட்ட கட்டுரையை கைவசம் வைத்திருந்தது ஜாமீர் செய்த மகா பாவமாக போலீஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக