ஞாயிறு, மார்ச் 16, 2014

அமெரிக்க போயிங் நிறுவனத்தின் டிரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து கோளாறு

அமெரிக்க போயிங் நிறுவனத்தின் டிரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்து வருகின்றன. நேற்று இரவு பாரிசிலிருந்து புதுடெல்லி வரவிருந்த ஏஐ-142 என்ற டிரீம்லைனர் விமானம் கடைசி நிமிடத்தில் ஸ்பாய்லர் என்ற வேகத்தடுப்பு கருவி செயல்படாததால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் இன்று கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ளுவதற்காக கிட்டத்தட்ட 236 பயணிகள் இந்த விமானத்தில் டெல்லி வருவதாக இருந்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஸ்பாய்லர் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியா அனுப்பப்படுவார்கள் என்று ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஹாங்காங்கிலிருந்து கிளம்பவேண்டிய ஏர்இந்தியா டிரீம்லைனர் விமானம் இதே பிரச்சினையினால் தரையிறக்கப்பட்டது. அதேபோல், பிப்ரவரி மாதத்தின் மத்தியிலும் டெல்லி-பிராங்க்பர்ட் விமானம் ஒன்று இதே பிரச்சினையில் செயல்படாமல் நின்றுள்ளது.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சி ஒன்றிற்கு வந்திருந்த போயிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தினேஷ் கெஸ்கரை சந்தித்த ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் இயக்குனர் ரோஹித் நந்தன் இந்தப் பிரச்சினைகள் குறித்து கண்டிப்புடன் பேசியுள்ளார். இந்தத் தவறுகள் ஒவ்வொன்றிற்கும் போயிங் நிறுவனம் பதில் சொல்லவேண்டும் என்ற அளவிற்கு அவர் குறிப்பிட்டதாக அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக