சனி, மார்ச் 29, 2014

பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்ததால்:தொண்டரின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்ட நடிகை நக்மா

பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்த தொண்டரின் கன்னத்தில், நடிகை நக்மா ‘பளார்’ என்று அறைந்தார்.
நக்மா பிரசாரம்
நடிகை நக்மா உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கிறார்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது.
சில நாட்களுக்கு முன் பிரசாரத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், நக்மா அதை பெரிதுபடுத்தவில்லை.
சில்மிஷம்
இந்த நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. மீரட் நகரில் நடிகை நக்மா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். நக்மாவை அருகில் சென்று பார்ப்பதற்காக பல இடங்களில் கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைவிட்டார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நக்மா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.
அதிர்ச்சி
இந்த சம்பவத் தினால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நான் மீரட் பக்கமே வரமாட்டேன்’’ என்றார்.
இந்த சம்பவம் பற்றி மீரட் காங்கிரஸ் தலைவர் சலிம் பாரதி கூறுகையில், மீரட்டில் நக்மா போட்டியிடுவதால் தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், அதிக அளவில் கூட்டம் கூடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக