செவ்வாய், மார்ச் 25, 2014

வாகன சோதனையில் சிக்கிய ரூ.8¼ லட்சத்தை மறைத்த 2 எஸ்.ஐ.க்கள் கைது

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் குப்பனூர் சோதனை சாவடியில் நேற்று இரவு வீராணம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், கோவிந்தன் மற்றும் இளைஞர் காவல் படையை சேர்ந்த பிரபு ஆகியோர் அந்த வழியாக வந்த கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது ஏற்காடு பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 2 பைகளில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் இருந்தவரிடம் விசாரித்த போது அவர் ஏற்காடு கூட்டுமுத்தல் கிராமத்தை சேர்ந்த மரமேஸ்திரி குப்புசாமி (37) என்று தெரியவந்தது. மேலும் அவர் கொடைக்கானலில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரித்த போது பணத்துக்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து குப்புசாமி, காரில் வந்த ராமசுந்தரம், கார் டிரைவர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் வீராணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து பணம் முழுவதையும் அவர்கள் எண்ணிப்பார்த்து உள்ளனர்.இதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர். அப்போது பையில் இருந்த பணத்தை எண்ணிபார்த்த போது அதில் ரூ. 26 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது.

அப்போது குப்புசாமி தான் ரூ. 35 லட்சம் கொண்டு வந்ததாகவும், ஆனால் போலீசார் ரூ. 8¼ லட்சத்தை குறைத்து காட்டுவதாகவும், இதனால் தான் கையெழுத்து போட மாட்டேன் என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் திகைத்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீசார் குப்புசாமி 2 பையை கொண்டு வந்தார். அதில் ஒரு பையை வீராணம் போலீஸ் நிலையத்திலேயே மறந்து வைத்து விட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.(பொறுப்பு) அமல்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஸ்.எஸ்.ஐ.க்கள் சுப்பிரமணி, கோவிந்தன் ஆகியோர் ரூ. 8¼ லட்சத்தை மறைத்து வைத்து பின்னர் பங்கு போட்டு கொள்ள முடிவு செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.ஐ.க்கள் சுப்பிரமணி, கோவிந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக போலீசார் அவர்கள் 2 பேரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் மோசடி மற்றும் பணத்தை அபகரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மோசடியில் ஈடுபட்ட 2 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்களும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் இது போன்று இனி யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக