ஞாயிறு, மார்ச் 16, 2014

மர்மக் கோடுகள்!


இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது அளவிலா ஆச்சரியம் பிறக்கிறது. பல கோடி நட்சத்திர மண்டலங்களையும், கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே, உயிர்கள் தோன்றியது முதல் அந்த உயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது.


அவற்றில் ஒன்றுதான், நாஸ்கா கோடுகள். இவை விடை காண முடியாத பெரும் மர்மம்! பெரு நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும் நாஸ்கா பாலைவனத்திலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கோடுகள் அவை. 1994–ல் ‘உலக தொல்லியல் பாரம்பரிய தளம்’ என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது இது.
நாய், பறவை, குரங்கு என்று பிரம்மாண்ட உருவங்களாகத் தோற்றமளிக்கும் நாஸ்கா கோடுகள் 1927–ம் ஆண்டு விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டன. அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்கள் கி.பி. 400– கி.பி. 600 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஒரு சாரர் இந்தக் கோடுகள் விவசாயிகள் உருவாக்கியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலக வாசிகளால் ஏற்படுத்தப்பட்டவை என்றும் கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.
 இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகள் அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டன, யாரால் வரையப்பட்டது, அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன, அவை நமக்கு உணர்த்துபவை என்ன என்பவை போன்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக