வியாழன், ஜூன் 21, 2012

குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவுக்கு பாஜக ஆதரவு !

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியானது அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா
ஸ்வராஜ் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது வேட்பாளரை அறிவிக்கும் முன்பே எங்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆரோக்கியமான அந்த நடைமுறையைக் கடைபிடிக்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை அவ்வளவு எளிதில் வெற்றிபெற விடமுடியாது. நிச்சயம் கடுமையான போட்டியை உருவாக்குவோம்.
எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் சிவசேனாவும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக இருப்பதால் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் பாரதிய ஜனதா கட்சியானது அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. பாஜகவுடன் சிரோன்மணி அகாலி தளமும் சங்மாவை ஆதரிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் எங்களது முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்படாது என்றார் அவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக