வெள்ளி, ஜூன் 22, 2012

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர் !

 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன் னயம் செய்து விடல்" என்ற குறளை நாம் பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்போம். இந்தக் குறள் கூறுவது போன்று நடந்து காட்டியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.  சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி நேற்று இரவு ராயப்பேட்டையில் இருந்து யானைக்கவுனிக்கு ரூ.80 கட்டணம் பேசி, பயணியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக்கவுனியை சென்றடைந்ததும் போதையில் இருந்த பயணி வாடகை தரமறுத்து தகராறு செய்தார். வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதாக இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பச் சென்றார்.

தன்னுடைய ஆட்டோ நிறுத்திமிடம் சென்றபிறகு ஆட்டோவில் மஞ்சள் பை ஒன்றைப் பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகாரப் பயணி தவறவிட்டிருக்கக் கூடும் என்று யூகித்த பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை தானே எடுத்துக் கொள்ள முயலவில்லை.

இன்று காலையில் அந்தப் பணத்தை யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விவரங்களைக் கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டிய காவலர்கள், அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ ஓட்டுநருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் ஓட்டுநர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக