திங்கள், ஜூன் 25, 2012

செத்துப் போன தூக்குத் தண்டனை கைதிக்கு கருணை காட்டிய பிரதீபா பாட்டீல் !

 Pratibha Pardons Dead Convict பெங்களூர்: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம்
ஆண்டு பகல்கோட்டில் உள்ள ஜூலியால் தாலுகாவில் குடியேறி, சதாசிவ அப்பண்ணா மடத்தில் தங்கியிருந்தார். அவர் மடத்தின் அருகிலுள்ள பள்ளிக் கூடத்திலிருந்து 16 வயது சிறுமியை கடத்தி வந்து மடத்தில் வைத்து கற்பழித்து, கொலை செய்து விட்டு தலைமறைவானார். நான்கு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் கொடுத்த தகவலின்படி சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஷீரடியில் வைத்து பாபுராவை போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் பாபுராவுக்கு 2005ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தபோது உயர் நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாபுராவ் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். கடந்த ஜூன் 20ம் தேதி, குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கருணை மனு வந்தபோது பாபுராவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அவர் கையெழுத்திட்டார்.
ஆனால் பாபுராவ் பெல்காம் சிறையில் இருந்தபோது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு 2007ல் தனது 31வது வயதில் இறந்துவிட்டார். இந்த தகவலை குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகத்துக்கு முறைப்படி கர்நாடக சிறை அதிகாரிகளோ, உள்துறை அலுவலகமோ தெரிவிக்கவில்லை. அதனால் கவனக்குறைவு காரணமாக நடந்த சம்பவம், பிரதீபா பாட்டீலின் முடிவு விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக