வெள்ளி, ஜூன் 22, 2012

பிரணாப் முகர்ஜி புதிய ஜனாதிபதி? 6 1/4 லட்சம் ஓட்டுகளுடன் வெற்றி வாய்ப்பு !

 ஜூலை 19ந் தேதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான நடைமுறை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர், வருகிற 28ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. 

ஆனால், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக இருந்த பா.ஜனதா, ஏற்கனவே களத்தில் இருக்கும் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க முடிவு எடுத்து உள்ளது. இந்த தகவலை பா.ஜனதா கட்சி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்மந்திரி நவீன்பட்நாயக் ஆகியோர் சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். தற்போது பா.ஜனதாவும் அவரை ஆதரிப்பதன் மூலம், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கும் சங்மாவுக்கும் நேரடி போட்டி நடைபெறுவது உறுதியாகிவிட்டது. 

காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. 

இந்த கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் முயலாம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் போன்ற முக்கிய கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்துள்ளன. 

அதே நேரத்தில், பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, அதில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளும் பிரணாப்பை ஆதரிக்க முன் வந்துள்ளன. அத்துடன்4 இடதுசாரி கட்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பார்வர்டுபிளாக் ஆகிய இரு கட்சிகளும் பிரணாப்புக்கு தங்கள் ஆதரவை நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளன. 

மற்ற இரு கட்சிகளாக இந்திய கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. 

ஜனாதிபதி தேர்தலில், பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட மாநில சட்டசபை உறுப்பினர்கள் மொத்தம் 4896 பேர்(எம்.பி.க்கள்&776; எம்.எல். ஏ.க்கள் 4120) ஓட்டு போட தகுதி பெற்றவர்கள். அவர்களுடைய மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

எம்.பி.க்களுக்கு சமமான ஓட்டு மதிப்பும், எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களுடைய மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும் ஓட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போட்டால் பதிவாகும் மொத்த ஓட்டுகளின் மதிப்பு, 10.98 லட்சம் ஆகும். 

இதில் 50 சதவீதத்திற்கு மேல், அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் பெறுபவர், புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போதைய கட்சி நிலவரப்படி, ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

அவர் வெற்றி பெறுவதற்கு 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் போதும். ஆனால், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக 6 லட்சத்து 29 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆதரவு இல்லாததால், பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு மதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரமாக குறைந்துவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆதரிக்க முன்வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு என்பதை மம்தா இன்னும் அறிவிக்கவில்லை.

ஒரு வேளை அவர் சங்மாவை ஆதரிக்க முன்வந்தாலும், பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு மதிப்பு 3 லட்சத்து 56 ஆயிரமாக மட்டுமே உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு இல்லாததால், காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு மதிப்பு 4 லட்சத்து 12 ஆயிரமாக குறைந்துவிட்டது. என்றாலும், சமாஜ்வாடி (66688 ஓட்டுகள்), பகுஜன் சமாஜ் (45473), ஐக்கிய ஜனதா தளம் (40737), சிவசேனா (18495), மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (6138), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் (41000) ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதால், பிரணாப் முகர்ஜியின் ஆதரவு ஓட்டுகள் 6 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்து உள்ளன. 

அதே நேரத்தில், அ.தி.மு.க. (36,920 ஓட்டுகள்), பிஜு ஜனதா தளத்தின் (30125) ஓட்டுகளை சேர்த்தால் சங்மாவின் ஆதரவு ஓட்டுகள் 3 லட்சத்து 10 ஆயிரம் ஓட்டுகள்தான். ஒருவேளை திரிணாமுல் காங்கிரசும் அவரை ஆதரித்தால், இந்த ஆதரவு எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரமாக மட்டுமே உயரும். 

எனவே, ஏறத்தாழ 6 லட்சத்து 29 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவதற்கு, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக