திங்கள், ஜூன் 25, 2012

குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள் !

அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் 16 ஆயிரம் பேர் இன்றும் தற்காலிக அகதிகள் முகாமில் வாழ்வதாக அரசு சாரா நிறுவனமான ஜன்விகாஸ் கூறுகிறது.அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், சாக்கடை வசதி எதுவும் இல்லாமல் முற்றிலும்
சுகாதாரமற்ற சூழலில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விஷயத்தில் மோடி அரசு முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.
குப்பை மேடுகளுக்கு அருகே 10 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜன்விகாஸுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
ஜன்விகாஸ் ஏற்பாடுச் செய்த இன்ஸாஃபி தகர்பர் என்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது துயரமான வாழ்க்கையைக் குறித்து விவரித்தனர்.
தங்களின் புகார்களை கூட கேட்க அதிகாரிகள் தயாரில்லை என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாமா பானு அன்ஸாரி கூறினார்.
நிரம்பி வழியும் சாக்கடைகளில் கழிவு நீர் தங்களின் காலனிக்கு வருவதாகவும், சாக்கடையில் ஒரு குழந்தை சிக்கி இறந்ததாகவும், தொற்று நோய்களும், இதர நோய்களும் பரவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் இல்லை என்பதை நம்பச்செய்ய முயற்சிக்கும் அரசு, உண்மைகளின் பால் கண்ணைத் திறக்கவேண்டிய நேரம் இது என்று பீப்பிள்ஸ் யூனியன்  ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்) செயலாளர் ரோஹித் பிரஜாபதி தெரிவித்தார்.
தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அகதிகள் காலனியில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
மூவ்மெண்ட் ஃபார் செகுலர் டெமோக்ரஸியின் பிரகாஷ் ஷா, ஜன்விகாஸ் சி.இ.ஒ விஜய் பார்மர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் அகதிகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் என்.ஜி.ஓக்கள், முஸ்லிம் ஜீவகாருண்ய அமைப்புகள் ஆகியன நிர்மாணித்த தற்காலிக மையங்களில் வசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக