திங்கள், ஏப்ரல் 01, 2013

90 சதவீத இந்தியர்கள் கால்நடைகளைப் போல வாக்களிக்கின்றனர் - கட்ஜு கடும் தாக்கு!

நாட்டில் 90 சதவீத இந்தியர்கள் ஆடு, மாடுகளைப் போல வாக்களிக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத்தில் அதிக கிரிமினல்கள் வந்துவிட்டனர். நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவை முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது
என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; “90 சதவீத இந்தியர்கள் ஆடு, மாடுகளைப் போல வாக்களிக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத்தில் அதிக கிரிமினல்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் இந்தியாவை முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது. ஜாதி, மதங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களால் நாடு நிர்வகிக்கப்படுகிறது. அதனால் நான் வாக்களிக்க மாட்டேன். என்னுடைய வாக்குக்கு அர்த்தமில்லாதபோது நான் ஆடு மாடுகளைப் போல வரிசையில் நின்று வாக்களிக்க விருப்பமில்லை. 
நான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானவன். இந்தியா உண்மையான ஜனநாயக நாடு இல்லை. மதச்சார்புக் கொள்கையை மதிப்பதால் என்னை காங்கிரஸ்காரன் என்று முத்திரை குத்துகிறார்கள். அது அவர்களுடைய பார்வை. அதை நான் தடுக்கவில்லை. விளம்பரப் பசி உடையவன் என்று என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் சொல்லும் கருத்துகள் விமர்சனங்களை எழுப்பிவிடுகின்றன. அதற்கு நான் பொறுப்பல்ல.
நடிகர் சஞ்சய் தத் ஏற்கெனவே அதிக துன்பத்தை அனுபவித்திருக்கிறார். அதனால் அவருக்கு மன்னிப்பு தர வேண்டும் என்றேன். சல்மான் கான் போன்ற நடிகர்களுக்காகவும் நான் மன்னிப்பு கோருவேன். அவர்களின் வழக்குகளை ஆய்வு செய்த பிறகு, எனக்குத் திருப்தி ஏற்பட்டால்தான் மன்னிப்பு வழங்கக் கோருவேன்.
நாட்டில் தார்மீக நெறிமுறைகள் எதுவும் இல்லாதபோது, ‘ஊழலை ஒழிப்பேன்’ என்று சொல்லி பிரசாரம் செய்பவர்களை என்ன சொல்வது? இப்போதிருக்கும் சூழலில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது.” என்று கட்ஜு கூறினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக