புதன், ஏப்ரல் 17, 2013

அடைக்கலம் கேட்ட மக்களுக்காக உயிர் துறந்த எம்.பி.!

குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து கொலைச் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃபிரியின்  மனைவி ஸாகியா ஜாஃப்ரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  2002 இல் குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை காரணம் காட்டி நரேந்திர மோடி தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை ஒன்றை திட்டமிட்டு நடத்தினர். குஜராத் மாநில அஹ்மதாபாத்தில் உள்ள குல்பர்கா ஹவுசிங் சொசைட்டி பகுதியில் வைத்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த பத்து வருடங்களாக நீதி கேட்டு போராடி வருகிறார்கள். 
இதில் பாதிக்கப்பட்டவர்களில் இம்தியாஸ் பதான் என்பவரும் ஒருவர். இவர் தன்னுடை எட்டு குடும்ப உறப்பினர்களை தன் கண்முன்னே பலி கொடுத்தவர். குஜராத் முதல்வர் நர மோடிக்கு எதிராக சாட்சி சொன்னவர்களில் இவரும் ஒருவர். கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்பி இஹ்சான் ஜாஃப்ரி நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டதை நேரில் பார்த்தவரும் இவர்தான். 
இஹ்சான் ஜாஃப்ரி முன்னாள் எம்பி என்பதால் அவரது வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அவரது வீட்டில்  அடைக்கலம் புகுந்திருந்தனர். அதில் பெரும்பான்மையோர் பெண்களும்  குழந்தைகளுமே. இந்நிலையில் இவரது வீட்டை சுற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூடுகின்றனர். உடனே இஹ்சான் ஜாஃப்ரி மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்கிறார். 
ஆனால் மோடியோ உதவி செய்வதற்கு பதிலாக குற்றம் சாட்டும் விதத்தில் பேசுகிறார்.  அதனால் மனம் உடைந்து போன ஜாஃப்ரி  ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கேட்டார், ஆனால் கொடியவர்கள் அவரை முதியவர் என்றும் பாராமல் வெட்டி கொன்று தீயில் போட்டனர். அது மட்டுமல்லாது அவரது வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த பெண்களை, குழந்தைகளை, வெட்டியும் எரித்தும் கொன்றனர். 
இந்தக் கலவரத்தை முதல்வர் மோடி உள்ளிட்ட 59 பேர் தூண்டியதாக கொல்லப்பட்டஇஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, குல்பர்க் சொசைட்டி கூட்டுப்படுகொலை குறித்து விசாரிக்க சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி. “இந்தக் கலவரத்தில் மோடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தொடர்பு இல்லை’ என்று கூறி, அவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்தது.
இதை எதிர்த்து, ஸாகியா ஜாஃப்ரி, அஹ்மதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்தக் கலவரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை எஸ்.ஐ.டி. அல்லாத வேறொரு சுயேச்சையான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது மனுவை மாஜிஸ்திரேட் பி.ஜே.கணத்ரா விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 24ஆம் தேதியில் இருந்து, நாள்தோறும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார், மனித நேயம் அற்ற இந்த கொடியவர்கள் தண்டிக்கப்படுவார்களா? 
நன்றி : மலர் விழி / சிந்திக்கவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக