வியாழன், டிசம்பர் 13, 2012

ராமநாதபுரத்தில் சூரிய மின் சக்தி பூங்கா: ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின் சக்தி  பூங்கா அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம்  கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தமிழ்நாடு தொழில்  வளர்ச்சி நிறுவனம் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய  மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்களை  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிறுவுவதற்கு தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில்  920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும்  வகையிலான சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா  முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்திற்கும், ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற்கும்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை சிறப்பாக  அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வடிகால்  வசதிகள், போதுமான தண்ணீர் வசதி, செம்மைப்படுத்தப்பட்ட நில வடிவமைப்பு,  மின்சாரம் வெளியேற்று வசதிகள் போன்றவைகளை சூரிய மின் சக்தி  உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் அமைக்கப்படும். 

இதனால், இப்பூங்காவில் அதிக அளவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப் பதற்கு  முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது அரசு மற்றும்  தனியாருடைய கூட்டு முயற்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக பிரத்யேகமாக  உருவாக்கப்படுகிறது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா திட்டம் 12 மாதங்களில் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 பேர்  வேலைவாய்ப்பு பெறுவர். இந்தப் பூங்கா வானது, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை  2012-ன்படி அமைக்கப்படும் முதலாவது சூரிய மின்சக்தி பூங்காவாகும்" என்று  கூறப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. வரவேற்கின்றேன். உடனடியாக நிறைவேற்ற பாருங்கள். அணுவுலைகள் வேண்டா. நன்றி.

    பதிலளிநீக்கு