திங்கள், டிசம்பர் 24, 2012

திரிபுராவில் இளம்பெண்ணை கற்பழித்து, மரத்தில் கட்டி வைத்த கும்பல் !

அகர்தலா: திரிபுராவில் 37 வயது குடும்பத் தலைவி ஒருவரை ஒரு கும்பல் கற்பழித்து அவரை நிர்வாணமாக்கி அனைவர் முன்பும் அடித்து, மரத்தில் கட்டி வைத்துள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு தலைநகரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திரிபுராவில் 5 வயது குழந்தையின் தாயை ஒரு கும்பல் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு திரிபுராவில் உள்ள பிஷால்கரைச் சேர்ந்த 37 வயது குடும்பத் தலைவியை ஒரு கும்பல் கற்பழித்தது. மேலும் அவரை நிர்வாணமாக்கி ஊர் மக்கள் முன்பு அடித்து நொறுக்கியது. அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் மரத்தில் கட்டி வைத்துள்ளது. அவர் அதே நிலையில் பல மணி நேரம் இருந்தும் அவரை யாரும் காப்பாற்ற வரவில்லை. பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 7 பேரைக் கைது செய்தனர், 3 பேரை தேடி வருகின்றனர். மேலும் அப்பெண்ணின் கணவர் அந்நேரத்தில் எங்கே சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த கும்பல் அப்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து பெண்கள் உள்பட பலர் முன்பு கற்பழித்துள்ளனர். ஆனால் ஒருவர் கூட அவரைக் காப்பாற்றவில்லை என்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பிஷால்கரில் கண்டனப் பேரணி நடந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக