திங்கள், டிசம்பர் 24, 2012

பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: மத்திய அரசு ஆலோசனை !

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில்,குரூரமான பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்டங்கள் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவத்திற்கு நீதிகேட்டு நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.டெல்லியில் 6 வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.இந்தியா கேட் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பின்னர் ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகை நோக்கிச்சென்றனர். 


காவல்துறையின் தடுப்புகளை மீறிச் சென்ற மாணவ - மாணவிகள், ஒருகட்டத்தில் ஜ்னாதிபதி மாளிகையை ஒட்டிய சுற்றுச்சுவரில் ஏற முயற்சித்தனர்.ஆனால் ஜனாதிபதியை சந்தித்து முறையிட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்பிய அவர்கள், காவல்துறையினர் எச்சரித்தும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.இதனையடுத்து காவல்துறை வாகனங்களை மாணவர்கள் தாக்கத்தொடங்கியதால்,தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைக்க நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தடியடி நடத்தத் தொடங்கினர். மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் காவல்துறையினர் வீசி எறிந்தனர்.

காவல்துறையினரின் தடியடியில் ஒரு சில மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இருப்பினும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்கும் மக்களின் போராட்டம் தொடர்ந்தது.

மரண தண்டனை :

இந்நிலையில் டெல்லி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.

கைதாகியுள்ள அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத் தருவதற்கு போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்,விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 

மாணவி பாலியல் வன்முறையின் பின்னணி குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.குரூரமான பாலியல் வன்முறைகளை அரிதினும் அரிதான குற்றங்களாகக் கருதி மரணதண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக