ஞாயிறு, டிசம்பர் 23, 2012

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு !

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டெண்டுல்கரின் அண்மைய ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரலும் வலுத்தது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமை சச்சினுக்கு உண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக