வெள்ளி, டிசம்பர் 28, 2012

தமிழகத்தில் “ஸ்மார்ட்” ரேஷன் கார்டு அறிமுகம் !

சென்னை: தமிழகத்தில் தற்போது, புழக்கத்தில் உள்ள, குடும்ப அட்டைகளை அடுத்த 2014ம் ஆண்டு வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 2015ம் ஆண்டில் "ஸ்மார்ட்” குடும்ப அட்டையை பொது மக்களின் புழக்கத்துக்கு கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், தற்போது, புழக்கத்தில் இருந்து வரும் குடும்ப அட்டைகளை 2011 மற்றும் 12ம் ஆண்டுகளுக்கான, கூடுதலாக, உள்தாள் இணைக்கப்பட்டு, கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த உள்தாள்களும், இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவதால் ஜனவரி, 1 முதல் குடும்ப அட்டைகளில்  புதிதாக உள்தாள்கள் இணைக்கப்பட வேண்டும். "தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப
அட்டைகளின் செல்லத்தக்க காலம், 2013 ஜன., 1ம் தேதியில் இருந்து, டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது' என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்தாட்களை அச்சடித்து, சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் வினியோகித்து, அட்டைகளில் ஒட்டும் பணி அடுத்த, இரண்டு மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அட்டைகளின்  செல்லத்தக்க காலம், ஓராண்டுக்கு, அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டாலும், அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்தே, உள்தாள்களை வழங்க, அரசு, முடிவெடுத்துள்ளது. தற்போது, அச்சிட உள்ள, உட்தாள்கள், 2013 மற்றும் 2014ம் ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இனி புதிதாக குடும்ப அட்டை வழங்கப்படும்போது, அது மின்னணு தகவல்கள் அடங்கியதாகவே இருக்கும். தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில், கண் கருவிழி, கைவிரல் ரேகை பதிவு கொண்ட, ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் இதற்காக கண் கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுப் பணி நடந்து வருகிறது. அடுத்த ஓராண்டில் முழுமையான கணக்கெடுப்புப் பணி முடிந்து, தகவல் தொகுப்பை பெற்று அதற்கு, பின் தான், ஸ்மாட் கார்டு, தயாரிப்பு பணிகளை துவங்க முடியும். தமிழகத்தில் 2015ல் ஸ்மார்ட் குடும்ப அட்டை புழக்கத்துக்கு வரத்தொடங்கும். அதற்கு முன், முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பரீட்சார்த்தமான முறையில், ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்குவதற்கான, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக