திங்கள், ஜூலை 15, 2013

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!

நெல்லை: நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி, மசூதின் மனைவி ஹஸனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ.8,56,000/ஐ இழப்பீட்டு தொகையாக தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு வழங்கியது.
நெல்லை மேற்கு மாவட்ட கடையநல்லூர் மசூத் கொலையில் ஈடுபட்ட வேலூர் மாவட்ட எஸ்.பி ஈஸ்வரன் கடந்த மே மாதம் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9 வது பட்டாலியன் கமாண்டன்டாக மாற்றப்பட்டார். இந்நிலையில் மசூத் கொலை வழக்கை தொடர்ந்து எஸ்.பி. ஈஸ்வரன் பதவி இறக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கும்படி உள்துறை செயலாளர் உத்தவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே இவ்வழக்கில் கியூ பிரிவு டி.எஸ்.பி சந்திரபால் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Info : Popularfronttn.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக