வெள்ளி, டிசம்பர் 30, 2011

ரஜினி தன் வருமானவரி கணக்கை வெளியிடுவாரா?


கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தான் அன்னா ஹசாரேவை ஆதரித்து வருகின்றனர். கறுப்பு பணத்தால் கட்டப் பட்ட கல்யாண மண்டபத்தில் தான் போராட்டம் நடைபெற்று வருகிறது" என்று துணிச்சலாக போட்டு உடைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.இதில் உண்மை இல்லாமலும் இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனைகளில் கணக்கில் காட்டப் படாத ரூ 18750 கோடி மதிப்பிலான
சொத்துப் பத்திரங்கள், ரொக்கப் பணம், பொருட்கள்  போன்றவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கறுப்புப் பணம் புழங்குவதற்கும் வரி ஏய்ப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுவதற்கும் இது ஒரு உதாரணம். வருமானவரித் துறையினர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களிலும் செல்வாக்கான தொழில் அதிபர்கள், சினிமாத் துறையினர் வீடுகளிலும் சோதனை நடத்துவது கிடையாது. 

அதற்காக ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள், செல்வாக்கான தொழில் அதிபர்கள் மற்றும் சினிமாத் துறையினர் முறைகேடு செய்வது இல்லை என்று அர்த்தம் கிடையாது. அவர்களை நெருங்க அரசுக்கு ஒரு வித பயம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின்  துணிச்சல் மத்திய அரசுக்கும் வருமானவரித் துறையினருக்கும் வரப் போவதில்லை. ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்து வந்தார்  நடிகர் விஜய். சென்னை வந்த அன்னா ஹசாரேவை அவர் படம் பார்த்த தியேட்டரில் சென்று சந்தித்தார் தேசப்பற்று(!) நடிகர் அர்ஜூன்.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தம் கல்யாண மண்டபத்தைத் தந்து தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி காந்த்.  மூவரும் தாங்கள்  சம்பாதிக்கும் பணத்துக்கு முறையாக வருமான வரி கட்டி வருகின்றனரா என்பது யார் அறிவார்? இதைத் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் துணிச்சலாக கேட்டுள்ளார். ரஜினி தரப்பில் இருந்து இது வரை பதில் இல்லை. மடியில் கனமில்லையேல் பயமெதற்கு? ரஜினி உட்பட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய், அர்ஜூன் போன்றவர்கள் தங்களின் கடந்த கால வருமானவரித் துறை கணக்குகளை தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இல்லையேல் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியது உண்மைதான் என்றே நாம் நம்ப வேண்டி இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக