வியாழன், டிசம்பர் 22, 2011

1 முதல் 6​ம் வகுப்பு வரை ஒரேயொரு பாடப்புத்தகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு முதல் 1 முதல் 6ம் வகுப்பு வரைக்கும் ஒரேயொரு பாடப்புத்தகமும், 7, 8ம் வகுப்புகளுக்கு 2 பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் புத்தகசுமை குறையும். 
மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு

பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது. 

இந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கிடும் போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கு மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும் ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.

ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இதுநாள் வரை கழுதை பொதிசுமப்பது போல ஏகப்பட்ட புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற மாணவச் செல்வங்கள் அடுத்த ஆண்டு முதல் சிங்கம் போல 'சிங்கிள்' புக்கோடு பள்ளிக்கூடம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக