வெள்ளி, டிசம்பர் 30, 2011

கடலூர்- புதுவை இடையே கரையைக் கடந்தது தானே- கடும் சூறைக்காற்றுடன் கன மழை

Satellite Viewசென்னை: மிகத் தீவிரமான புயலான தானே, புதுச்சேரி கடலூருக்கு இடையே இன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது. தற்போது இது பலவீனமடைந்த தீவிர காற்றழுத்த மண்டலமாக கடலூர், புதுச்சேரி இடையே நிலை கொண்டுள்ளது. மேலும் பலவீனமடைந்து மேற்கு நோக்கி இது நகரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.


புயல் கரையைக் கடந்த காரணத்தால் கன மழையும் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் கடும் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.

இந்தப் பகுதியில் கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்து வருகின்றன.

புயலால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்வதால், திருவண்ணாமலை, தருமபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

புயல் பாதிப்பு குறித்து அறிய எண்கள்:

புயல் பாதிப்பு குறித்து அறிய சென்னை வானிலை ஆய்வு மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த மக்கள் 1800 எண்ணிலும் தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களைக் கேட்கலாம்.

மேலும் சென்னை மாநகராட்சி தகவலுக்கு எண் 1913, திருவள்ளூர் மாவட்ட தகவலுக்கு: 27661200 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக