வியாழன், டிசம்பர் 22, 2011

தீவிரவாத வழக்குகளை முடக்க சங்க்பரிவார் சதி – பாப்புலர் ஃப்ரண்ட்

em ar
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளை முடக்க சங்க்பரிவார் சதி செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள சங்க்பரிவார பாசிஸ்டுகள் மீது நடந்து
வரும் விசாரணையை முடக்கவே பாரதிய ஜனதா கட்சியினர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிவைத்து வருகின்றனர்.
இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் சுனில்ஜோஷி படுகொலை ஆகியவற்றின் சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் உட்பட சங்க்பரிவார் மீது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் வேகம் குறைந்து வருவதை பார்க்கும்போது பாரதிய ஜனதா செய்து வரும் சதித்திட்டம் வெற்றி பெற்று வருவதை நம்மால் உணரமுடிகின்றது.
இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளான மலேகான்,மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு ஆகியவற்றின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் மத்திய தலைமை என்.ஐ.ஏ மற்றும் இன்ன பிற விசாரணை குழுக்கள் நிரூபித்தன.
ஒரு குழு திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பதையும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டதையும் பட்டவர்த்தனமாக கண்டுபிடித்த பின்பும் அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. அதே போன்று இன்னும் 16 வழக்குகளில் இவர்களுடைய தொடர்பு குறித்து விசாரணைக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கானல் நீராகி வருகின்றது.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்புதான் பா.ஜ.க மற்றும் அதன் சக அமைப்புகள் செய்து வந்த குண்டுவெடிப்பு மற்றும் தகிடுதத்தங்கள் வெளி உலகிற்கு தெரியவந்தது. மேலும் இந்துத்துவா செய்து வந்த குண்டுவெடிப்புகளை தைரியமாக பகிரங்கப்படுத்தியவரும் இவரே! இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று பா.ஜ.கவினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக ‘சதி’களை அரங்கேற்றி வருகின்றனர்.
ஊழலுக்கு எதிரானவர்கள், நேர்மையானவர் என்று போலி பிரச்சாரம் செய்து வரும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் மதவாத வன்முறை செயல் திட்டத்தை மனதிற்கொண்டு இவர்கள் மீது மதசார்பற்ற கட்சிகள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.’ இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக