சனி, டிசம்பர் 31, 2011

காஸா மீது இஸ்ரேலியப் போர் விமானத் தாக்குதல்


கடந்த வியாழக்கிழமை (29.12.2011) காஸாவின் மத்திய மற்றும் வடக்குப் பிராந்தியங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இத்தாக்குதலினால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற்றதாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.
பெய்ட் லஹியாவின் அமெரிக்கன் பள்ளி அருகில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் மூன்று ஏவுகணைகளை எறிந்துவிட்டுச் சென்றதாக
உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பிரபல விடுதலைப் போராளியான ஸஹ்ராவின் வசிப்பிடம் அமைந்துள்ள மத்திய காஸா பிராந்தியத்திலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் எஃப் 16 ரகப் போர் விமானம் தாக்குதல் தொடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன் விடுதலைப் போராளிகள் பயன்படுத்தும் சுரங்கவழிப் பாதைகளையும் அவர்களின் பயிற்சிப் பாசறைகளையும் இலக்கு வைத்தே மேற்படி போர் விமானத் தாக்குதல்களைத் தாம் மேற்கொண்டதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்களுக்கு இரு தினங்கள் முன்பதாக மத்திய காஸாவில் அமைந்திருந்த மகாஸி அகதி முகாமைக் கையகப்படுத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அதிரடித் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் போராளிகளால் முறியடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புப் படையினர் பின்வாங்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தத் தோல்விக்கான பதிலடி நடவடிக்கையாக இந்தப் போர்விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக