ஞாயிறு, டிசம்பர் 25, 2011

5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட்ட வாக்குப்பதிவு

டெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி மாதம் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரோசி இன்று அறிவித்தார். 


7 கட்ட வாக்குப்பதிவு

பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாக ஜனவரி 30ம் தேதியும், மணிப்பூரில் ஜனவரி 28ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு பிப்ரவரி மாதம் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதன்படி பிப்ரவரி மாதம் 4,8,11,15,19,23,28 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கோவாவில் மார்ச் 3ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னோட்ட தேர்தல்

இந்த 5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 4ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே அனைவரின் கவனமும் உத்தரப் பிரதேசம் மீதே திரும்பியுள்ளது. அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடையே, மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒரே நேரத்தில், 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், இதை நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக