வியாழன், டிசம்பர் 29, 2011

டேம் 999’ படத்துக்கு பதிலடி : அணை 555 தமிழ் சினிமா தயாரிப்பு


டேம் 999‘ படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதை விளக்கி ‘அணை 555‘ என்ற பெயரில் புதிய சினிமா தயாரிக்கப்படுகிறது. இந்திய குற்றவியல் கழக மதுரை கிளை நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செயலாளர் கோபிநாத் கூறியதாவது:

 குற்றவியல் கழகம் சார்பில் மக்களின் சட்ட, அடிப்படை உரிமை, மனித உரிமை, நுகர்வோர் உரிமை, சுற்றுப்புறச் சூழல் உரிமைகளை காக்க மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்கள் நிலையம் அமைக்கப்படும். கேரளாவில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் சட்ட உதவி முகாம் நடத்தப்படும். மேலும் முல்லை பெரியாறு அணை பற்றி தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டுள்ள சிடிக்கள் 6 மாவட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
 முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உண்மை என்ன, அதன் தீர்வு என்ன என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள சிடியை மையமாக வைத்து ‘அணை 555‘ என்ற சினிமா எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில் படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 டேம் 999 படத்தில் பெரியாறு அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போல் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியாறு அணையின் உண்மை நிலையை விளக்கி ‘அணை 555‘ படம் தயாரிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக