ஞாயிறு, நவம்பர் 18, 2012

தாக்கரே! – வெறுப்பும், அச்சமும் நிறைந்த அரசியல் !

1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி பால் கேசவ் தாக்கரே என்ற பால் தாக்கரே 1950-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்டாக பொது வாழ்வில் களம் இறங்கினார். கேசவ் சீதாராம் தாக்கரே என்ற பொது ஊழியரின் மகன் பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு பாலா சாஹேப் ஆக மாறினார். பென்சில் போன்ற கண்ணாடியை அணிந்து கார்ட்டூன் வரைந்துகொண்டிருந்த பதின்பருவ பையன், தாக்கரே என்ற தீவிர ஹிந்துத்துவ, மராட்டிய பிராந்தியவாத தலைவராக மாறி மராட்டிய மண்ணை அச்சத்தில் ஆழ்த்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மும்பையில் ஃப்ரீ ப்ரஸ் என்ற பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையை துவக்கினார்
தாக்கரே. 1960-ஆம் ஆண்டு மார்மிக்ஸ் என்ற பெயரில் சொந்தமாக கார்ட்டூன் பத்திரிகையை ஆரம்பித்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழ்களில் தாக்கரேயின் கார்ட்டூன்கள் இடம்பெற்றன.
1960-ஆம் ஆண்டு மும்பையை சூழ்ந்து நின்ற குடியேற்ற எதிர்ப்பு உணர்வை ஆதாயமாக கருதிய பால் தாக்கரே, தாமதிக்காமல் மஹராஷ்ட்ரா மத்திய வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறினார். அவ்வாறு மராட்டியர்களின் விருப்பங்களை பாதுகாப்பது என்ற பெயரில் 1966-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி சிவசேனா உருவானது. தென்னிந்தியர்கள் மஹராஷ்ட்ராவில் குடியேறுவதாகவும், தனது கட்சியால் மட்டுமே மண்ணின் மைந்தர்களை காப்பாற்ற முடியும் என்று தாக்கரே அறிவித்தார்.
பிராந்திய வெறியை கிளறிவிட்டு மஹராஷ்ட்ரா மண்ணில் வேரூன்றிய சிவசேனாவுக்கு தாக்கரேயின் வார்த்தைகள் தாம் சட்டம். வகுப்புவாதத்தை கிளறிவிடும் தாக்கேரியின் அறிவிப்புகளால் இந்தியாவின் வர்த்தக நகரம் பலவேளைகளிலும் அஞ்சி நடுங்கியது. மஹராஷ்ட்ராவில் பிழைப்புக்காக குடியேறிய தென்னிந்தியர்களும், குஜராத்திகளும், மார்வாடிகளும் இதனால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர். மராட்டியர்களுக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன்வைத்த சிவசேனா, அதனை எதிர்ப்பவர்களை வன்முறையால் எதிர்கொண்டது.
மக்கள் கூட்டத்தின் உணர்ச்சியை கிளறிவிட தனது நாக்கின் கூர்மையை பயன்படுத்தி வந்த தாக்கரே, எப்பொழுது ஏதேனும் ஒரு எதிரியை சுட்டிக்காட்டுவார். ஒரு நாள் குஜராத் வியாபாரி என்றால், மறு நாள் தென்னிந்தியாவை சார்ந்தவர்கள். இறுதியாக தாக்கரேயின் எதிரியாக முஸ்லிம்கள் மாறினார்கள். இவ்வாறு நேரம், சூழலுக்கு ஏற்ப வெறுப்பையும், உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டு மண்ணின் மக்கள் என்ற கொள்கையில் இருந்து மெல்ல விடுபட்டு தீவிர ஹிந்துத்துவா அரசியலை நோக்கி நடைபோட்டார் தாக்கரே.
லட்சியங்கள் மாறினாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயுதமான வன்முறையை சிவசேனா காரர்கள் கைவிட்டதில்லை. 1990-ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகையை தடுக்க தாக்கரே மேற்கொண்ட தந்திரம், கிரிக்கெட் பிட்சுகளை சேதப்படுத்தவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை தகர்க்க விடுத்த அழைப்பாகும். ஹிந்துத்துவா கொள்கையை விமர்சிக்கும், முஸ்லிம்களின் பிரச்சனைகளை விளக்கும் பாலிவுட் திரைப்படங்கள் சிவேசனா காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.
ஹிந்துத்துவா அரசியலின் வளர்ச்சி தாக்கரேக்கு தேசிய அரசியலிலும் இடத்தை தேடித் தந்தது. 1985-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றிக்குப் பிறகு1988-ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தார் தாக்கரே. பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூரமான கலவரத்திற்கு தலைமை வகித்தவர்.
மும்பை கலவரத்தைக் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனது அறிக்கையில் பால் தாக்கரேயின் பங்கினை சுட்டிக்காட்டியது. ஆனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான பால்தாக்கரேயை சட்டத்தால் எதுவும் செய்ய இயலாதது இந்திய சட்டத்துறையின் தோல்வியாகும்.
1989-ஆம் ஆண்டு தாக்கரேயால் துவக்கப்பட்ட சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா, மிகவும் உணர்ச்சியைத் தூண்டும் மொழியை உபயோகித்தது. 1995-ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சிவசேனா மஹராஷ்ட்ராவின் ஆட்சியை பிடித்தது. அதிகாரத்தின் மோகத்தை நுகர்ந்த சிவசேனாவுக்கு பின்னர் வந்த நாட்கள் வீழ்ச்சியை நோக்கி பீடு நடைபோட வைத்தன. ஊழலும், முதுகில் குத்துவதும் கட்சியை அகல பாதாளத்திற்கு அழைத்துச் சென்றது. 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட தோல்வி வீழ்ச்சிக்கு ஆக்கம் கூட்டியது. ககன் புஜ்பால், நாராயண் ராணா போன்ற உயர் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.
மகன் உத்தவுக்கும், மருமகன் ராஜுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியால் கட்சியின் கட்டுப்பாடு தாக்கரேயிடம் இருந்து பறிபோனது. ராஜ் தாக்கரே மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் கட்சியை துவக்கிய பொழுது மராட்டிய சிங்கம் என்று சுய தம்பட்டம் அடித்த பால்தாக்கரேயின் கர்ஜனை அடங்கிப் போனது.
1999-ஆம் ஆண்டு சட்டப் பிரச்சனைகளை சந்தித்த பால்தாக்கரேக்கு, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதும், வாக்களிப்பதும் தேர்தல் கமிஷனால் தடைச் செய்யப்பட்டது. கடைசி நாட்களில் பால் தாக்கரே பல் இழந்த கிழட்டுச் சிங்கமாக மாறிப் போனார். சிவசேனா தொண்டர்கள் வீதிகளில் மோதுவதை காணும் துரதிர்ஷ்டவசமான நிலைக்கும் அவர் தள்ளப்பட்டார்.
மரணம் தாக்கரேயை அழைத்துச் சென்றுள்ளது. இவ்வுலகில் எவ்வளவுதான் அட்டூழியங்களும்,அக்கிரமங்களும் புரிந்தாலும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. அதற்கு பால்தாக்கரே மட்டும் விதிவிலக்கா என்ன? உலகியல் சட்டங்கள் வலுவிழந்தாலும், இறைவனின் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் எவரும் தப்பவியலாது!
அ.செய்யது அலீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக