செவ்வாய், நவம்பர் 20, 2012

ஹமாஸிற்கு சர்வதேச ஆதரவு அதிகரிக்கிறது !

காஸ்ஸா:இஸ்ரேலின் பயங்கரவாத ராணுவம் காஸ்ஸாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட சூழலில் ஹமாஸிற்கு ஆதரவு சர்வதேச அளவில் பெருகி வருகிறது. 2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய கொடூரத்தாக்குதலுக்கு பொறுப்பு ஹமாஸ் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தற்போது அதற்கு மாற்றமாக முதலில்
தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தான் தாக்குதலை நடத்துகிறோம் என்று இஸ்ரேல் பொய்களை வாரியிறைத்த போதிலும், தாக்குதலில் கொலை செய்யப்படுவது பிஞ்சுக் குழந்தைகளும், பெண்களும் தான் என்பது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது. அகதிகள் முகாமில் கூட இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
ஜோர்டான் ஆதரவு நடந்துவரும் பள்ளிக்கூடங்களும் தகர்ந்துபோயின. போராளிகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல், ஏன் அகதிகள் முகாம்களையும், பள்ளிக்கூடங்களையும் குறிவைக்கின்றார்கள்? என்று காஸ்ஸா மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 1400 ஃபலஸ்தீன் மக்கள் 2008-09 ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 13 இஸ்ரேலர்களும் கொல்லப்பட்டனர். போதுமான பதிலடிக்கொடுக்க முடியாத ஹமாஸிற்கு, இம்முறை துவக்கத்திலேயே இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுக்க முடிந்துள்ளது.
டெல் அவீவிலும், ஜெருசலத்திலும் ராக்கெட்டுகள் தாக்கியது, ஹமாஸின் ராணுவ பலம் அதிகரித்துள்ளது என்பதற்கான அடையாளமாகும். இஸ்ரேலின்  ஆளில்லா விமானங்களையும் போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். நவீன ஏவுகண எதிர்ப்பு டாங்குகளை ஹமாஸ் போராளிகள் உபயோகிக்கின்றனர். தரைப்போர் துவங்கினால், இஸ்ரேல் எதிர்பார்க்காத பதிலடி கிடைக்கும் என்று ஹமாஸ் கூறுகிறது.
பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்கும் இதுக்குறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல் அவீவில் தாக்குதல் நடக்கும் பொழுது காஸ்ஸாவில் ஹமாஸிற்கு ஆதரவாக போராட்டம் நடந்ததை சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன. ஹமாஸின் பதிலடிக்கு ஆதரவு தெரிவித்து ஃபத்ஹின் ஆதிக்கத்தில் உள்ள மேற்கு கரையில் ஏராளமான இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, இஸ்ரேல் தாக்குதலை துவங்கிய உடனே, எகிப்து மற்றும் துனீசியாவின் அரசியல் தலைவர்கள் காஸ்ஸாவிற்கு சென்றதும், அமைதி பேச்சு வார்த்தைகளை துவக்கியதும் ஹமாஸின் ராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது. இந்நாடுகளின் தலைவர்களுடன் கத்தர் மற்றும் துருக்கியின் அரசியல் தலைவர்களும் கெய்ரோவில் பிரச்சனைக்கு தீர்வு காணும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அரபு லீக்கின் பிரதிநிதிகள் காஸ்ஸாவிற்கு சென்றுள்ளனர். ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் ஃபலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் செல்வேன் என்று அறிவித்துள்ளார். 2008-09 காலக்கட்டத்தில் இருந்து மிகவும் மாறுபட்ட காட்சிகள் தாம் இவை. அரபுலக புரட்சியைத் தொடர்ந்து எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஹமாஸிற்கு ஆதரவான சூழலை உருவாக்கியுள்ளது.
இஃவானுல் முஸ்லிமீன் மற்றும் ஸலஃபிகளின் தலைவர்கள் ஹமாஸிற்கு போதிய உதவிகளை அளிக்கவேண்டும் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஹமாஸின் ஆதரவு அதிகரித்துள்ளதாக காஸ்ஸாவில் அரசியல் நோக்கரும், ஹமாஸ் விமர்சகருமான தலால் ஒகல் கூறியுள்ளார். இஸ்ரேலின் எஃப்-16 போர் விமானங்களை ஹமாஸ் சுட்டுவீழ்த்தியுள்ளது. காஸ்ஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஃபத்ஹ் தலைவர்களுக்கு ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக