புதன், நவம்பர் 21, 2012

ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு - எகிப்து முயற்சி வெற்றியடையுமா?

பாலஸ்தீனத்தின் காஸாவை ஆளும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்குமிடையே சிறிது நேரத்திற்கு முன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டைக் கொண்டு வர எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி  கடும் முயற்சி எடுத்துவந்தார். முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் முர்ஸி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடாவடித் தாக்குதலுக்கு 'வருத்தம்' தெரிவித்த ஒபாமா, ஹமாஸ் படையினர் தாக்குதலை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று
கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நாளை இஸ்ரேலிய அதிபரைச் சந்தித்துப் பேச உள்ளார்.

ஹமாஸ் தரப்பு கோரிக்கைகளாக,   ஹமாஸின் உறுப்பினர்களை இஸ்ரேல் உளவுத்துறை படுகொலை செய்துவருவது நிறுத்தப்பட வேண்டும் என்பதும், காஸா பகுதி மீதான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்பதும் இருந்தது. ஹமாஸின் இராணுவ தளபதி ஒருவரை இஸ்ரேலியர் படுகொலை செய்ததைத் தொடர்ந்தே இப்போர் மூண்டது குறிக்கத்தக்கது.

இந்நிலையில், போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ் நான்கு முக்கிய தீர்மானங்களை இரு தரப்பும் ஒத்துக்கொண்டுள்ளன என்றும் அதில், இஸ்ரேல் மூடிவைத்துள்ள காசா எல்லைப்பகுதிகளின்மீதான தடைகளில் விலக்கு கொண்டுவரவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் போர் நிறுத்த ஒப்பந்த ஷரத்துகள் இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை எனவும் அவை கிடைத்து வாசித்தப்பின்னரே தங்கள் முடிவை அறிவிக்க இயலும் என இஸ்ரேல் தரப்பிலிருந்து ரியூட்டரிடம் தெரிவித்ததாக சற்றுமுன் அல்ஜஸீரா கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போதும் காஸாமீது இஸ்ரேலின் விமானத்தாக்குதல் தொடர்கிறது. இதுவரை 130 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தாக்குதலில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அல் அக்ஸா தொலைக்காட்சியின் இரு வீடியோகிராபர்களும் உட்படுவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக