புதன், நவம்பர் 28, 2012

எகிப்து:நீதிபதிகளின் சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படுகிறது !

கெய்ரோ :தனது அதிகார வரம்பை அதிகரித்தது தொடர்பாக நாட்டில் எழுந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் எகிப்து அதிபர் முர்ஸி நடத்திய முயற்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. நாட்டின் உயர் நீதிபதிகளுடன் நேற்று முன் தினம் முர்ஸி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக இருந்தது என்று அவரது செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி கூறியுள்ளார். முர்ஸிக்கு எதிராக நாடு
முழுவதும் போராட்டம் நடத்த முன்னர் நீதிபதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். முர்ஸியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மோதியதில் நேற்று முன் தினம் 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
அதிகார வரம்பை அதிகரித்த நடவடிக்கையை வாபஸ் பெற முர்ஸி தயாராகவில்லை. ஆனால், அதிகாரத்தை குறிப்பிட்ட சில காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று அவர், நீதிபதிகளுக்கு உறுதி அளித்துள்ளார். சுதந்திர நீதித்துறையை மதிப்பதாகவும், அரசியல் சாசன நிறுவனங்களை பாதுகாக்கவே தனது அதிகார வரம்பை உயர்த்தியதாகவும் முர்ஸி விளக்கம் அளித்தார் என்று யாஸிர் அலி கூறுகிறார். அதேவேளையில் யாஸிர் அலியின் அறிக்கை குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால், இத்தீர்மானத்தில் நீதிபதிகளுக்கு ஆதரவான அணுகுமுறையே உள்ளது என்று பி.பி.சி கூறுகிறது. அதனிடையே, முர்ஸியின் அதிகார வரம்பை உயர்த்தியதை கண்டித்து நேற்றும் நாட்டின் பல பகுதிகளில் எதிர்கட்சிகள் கண்டனப் பேரணிகளை நடத்தினர். கெய்ரோவில் போலீசாரும், போராட்டக்காரர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக