வியாழன், நவம்பர் 22, 2012

கருவறைக்குள் கொட்டாவி விட்ட குட்டிப் பாப்பா... மலைக்க வைக்கும் ஸ்கேனிங் படம் !

லண்டன்: கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.சிசுவாக நாம் கருவில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 12 புகைப்படங்களை
வெளியிட்டுள்ளனர். அதில் கருவில் இருக்கும் சிசுவின் நகர்வுகள் குறித்த அட்டகாசமான விஷயங்கள் அருமையாக வந்துள்ளன. இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன் செய்து பார்த்தனர். கடைசி ஸ்கேனிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது.
இந்த 15 பேருக்கும் எட்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 ஆண் குழந்தைகள் பிறந்தன.
இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண 2டி ஸ்கேனிங் படத்தின் மூலம் துல்லியமாக இதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் 4டி ஸ்கேனிங் மூலம் எடுத்த படங்களை பின்னர் வீடியோவில் பதிவு செய்து பார்க்கும்போது அட்டகாசமாக தெரிகிறது இந்த கொட்டாவி விடும் காட்சிகள்.
இந்த வீடியோ படங்களை ஒவ்வொரு பிரேமாக அலசி ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். குழந்தையின் வாய் அசைவைத்தான் முக்கியமாக ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
குழந்தை கொட்டாவி விடுவது என்பது மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் மூளையை ரிலாக்ஸ் ஆக்கும் முயற்சியாகவும் இதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் சில ஆய்வாளர்கள் கூறுகையில், இதை கொட்டாவி என்று எடுத்துக் கொள்ள முடியாது.மாறாக, சிசுக்கள் தங்களது வாயைத் திறந்து மூடுவதாக எடுத்துக் கொள்ளலாம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நட்ஜா ரீஸ்லேன்ட் என்ற ஆய்வாளர் கூறுகையில், நிச்சயம் இது கொட்டாவிதான். அது வீடியோவில் பார்க்கும்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வாயை மெதுவாகத் திறந்து வேகமாக மூடுகின்றன இந்த சிசுக்கள். இது கொட்டாவிக்கான குணாதிசயம்தான். எனவே இது கொட்டாவிதான் என்பது அவரது கருத்தாகும்.
பாலின வேறுபாடின்றி அனைத்து சிசுக்களும் ஒரே மாதிரியான வாய் அசைவை வெளிப்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இளம் சிசுக்கள்தான் அதிகளவில் கொட்டாவி விட்டனவாம்.
சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு முறை சிசுக்கள் கொட்டாவி விட்டதாக ரீஸ்லேன்ட் கூறுகிறார்.
இருப்பினும் கொட்டாவி விடுவது எதற்காக என்று துல்லியமாகக் கூற முடியவில்லை. இது சோர்வின் காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும், மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவே இந்த கொட்டாவி விடுதலை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். அது உண்மையாக இருந்தால் சிசுக்களின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொட்டாவியையும் ஒரு அடையாளமாக எதிர்காலத்தில் டாக்டர்களால் கருத முடியும் என்பது ரீஸ்லேன்ட்டின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக