சனி, ஜூன் 22, 2013

மலிவு விலை குடிநீர்! அம்மாவின் அடுத்த(து) அதி(ரெ)ரடி!

சென்னை : தமிழகத்தில் மலிவு விலை சிற்றுண்டி, மலிவு விலை காய்கறி திட்டத்தின் தொடர்ச்சியாக மலிவு விலை குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்ப கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்த மலிவு விலை குடிநீர் தொடர்பாக முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்கள் நலம் பெறும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறைந்த விலையில் அரிசி மற்றும் தானியம் வழங்குதல், அம்மா உணவகம், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என துவக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள விலைவாசி கொடூரத்தில் இருந்து மக்களை காப்பாற்றவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும் தற்போது அம்மா மினரல் உற்பத்தி நிலையங்கள் துவக்கப்படுகிறது.
அண்ணாத்துரை பிறந்த நாளான வரும் செப்- 15 ம்தேதி இந்த திட்டம் துவக்கப்படுகிறது. அன்றைய நாளில் விற்பனையும் துவங்கும். முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இந்த உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். ரயில்வே நிர்வாகம் சார்பில் குடிநீர் பாட்டல் ஒன்றுக்கு 15 ரூபாய்க்கும், தனியார் தரப்பில் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஆனால் தமிழக அரசு லிட்டர் ஒன்றுக்கு பாட்டல் ரூ. 10 க்கு விற்பனை செய்யும். அரசு பஸ் போக்குவரத்து கழகம் மூலம் விற்கப்படும். அரசு பஸ்கள் மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்படும். சென்னை நகர்ப்புற பேருந்து நிலையங்களில் இந்த குடி நீர் கிடைக்கும். தொடர்ந்து மேலும் 9 இடங்களில் இந்த உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். நடுத்தர மக்களின் நிதிச்சுமையை இது குறைக்கும் என முதல்வர் ஜெயலலிதா நம்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் அம்மா உணவகத்தில் சிற்றுண்டியும் காமதேனுவில் காய்கறியும் விற்கப்படுவது போல் தண்ணீர் விற்பனையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக