தற்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழ்ங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 40 கோடி பேருக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச(ஸ்மார்ட்) செல்போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறும் ஏழைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகையை செலுத்தும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தை வரும் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு நவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போனை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஆதார் கார்டு அடிப்படையில் இந்த செல்போன்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வங்கியில் கணக்கும் இருக்க வேண்டும். இதற்காக மக்களுக்கு உதவுமாறு மாவட்ட நிர்வாகங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த செல் போன்களில், சம்பந்தபட்ட பயனாளிகளின், “ஆதார்’ அடையாள அட்டை எண்ணும் பதிவு செய்யப்படும். இலவச செல் போன்களை பெறும் பயனாளிகளுக்கு 100 மணி நேரத்துக்கு இலவச “டாக் டைம்’ அளிக்கப்படும். மேலும், 500 எஸ்.எம்.எஸ்.,களையும் இலவசமாக அனுப்பலாம். இதுதவிர குறைந்த கட்டணத்தில் இணைய வசதியையும் பயன்படுத்தலாம்.
பயனாளிகளுக்கான மானிய தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதும் அதுபற்றிய தகவல் இந்த செல் போன்களுக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். இந்த தகவலை படித்ததும் பயனாளிகள் உடனடியாக வங்கிகளுக்கு சென்று தங்களின் பணத்தை எடுக்கலாம்.மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் தகவலும் எஸ்.எம்.எஸ்., மூலம், பயனாளிகளின் செல் போன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் முறைகேடுகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படும்.
இந்த செல் போன் வழங்கும் திட்டத்துக்காக அரசுக்கு, 7,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனாலும், ஆதார் அடையாள அட்டை எண் வைத்திருப்போர் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே இந்த இலவச செல் போன்களை பெற முடியும். எனவே ஆதார் அடையாள அட்டை பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பிரதமர் அலுவலகம் முடுக்கி விட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்களில், பெண்களே குடும்ப நிர்வாகத்தை கையாளுகின்றனர் என்பதால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்த பெண்களுக்கு இந்த செல் போன்கள் வழங்கப்படும்.இந்த திட்டத்துக்கு ஆகும் செலவில், 50 சதவீதத்தை, தொலை தொடர்பு துறையும், மீதமுள்ள, 50 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும்.என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக