வியாழன், டிசம்பர் 01, 2011

இஷ்ரத் ஜகான் போலி எண்கெளன்டர்- சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு: மோடிக்கு ஆப்பு

Ishrat Jahanஅகமதாபாத்: இஷ்ரத் ஜகான் போலி எண்கெளன்டர் வழக்கை சிபிஐக்கு மாற்றி குஜராத் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் குஜராத் போலீசாரை நம்ப முடியவில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இஷ்ரத் ஜகான் மற்றும் 3 பேரை குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் அகமதாபாத் போலீசார் கூறினர்.

ஆனால், அப்பாவிப் பெண்ணான தங்களது மகளை குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கூறி இஷ்ரத்தின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை குஜராத் போலீசார் நியாயமாக விசாரிக்க மாட்டார்கள் என்பதால், இதை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.

ஆனால், சிபிஐ விசாரணைக்கு நரேந்திர மோடி அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை கடந்த நவம்பர் 18ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் போலீசாரால் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். உடலை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டு, எண்கெளன்டர் போல காட்டிவிட்டனர். இது எண்கெளன்டர் மரணம் அல்ல, மாறாக கொலையே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சதீ்ஷ் வர்மாவும் இது போலியான எண்கெளன்டர் தான் என்று நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து இன்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு புதிய குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த எண்கெளன்டர் வழக்கு சாதாரணமானதல்ல, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விவகாரமாகும். மேலும் இந்த வழக்கில் குஜராத் போலீசாரை நம்பிப் பயனில்லை. அவர்கள் நியாயமான விசாரணையை நடத்துவார்களா என்பது சந்தேகமே. இதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு விரைவிலேயே தாக்கல் செய்யவுள்ள புதிய குற்றப்பத்திரிக்கையில், 20 போலீஸ் குஜராத் அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்கவுள்ளதாகத் தெரிகிறது.

இதில் ஏற்கனவே இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் வஞ்சாரா (இவர் தான் இந்த நால்வரையும் சுட்டுக் கொன்ற போலீஸ் படைக்கு தலைமை தாங்கியவர்), பாண்டே (இவர் இந்த எண்கெளன்டரை சூப்பர்வைஸ் செய்தவர்) ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்றும் தெரிகிறது.

குஜராத்தில் நடந்து சிபிஐக்கு மாற்றப்படும் 4வது போலி எண்கெளன்டர் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சோராபுதீன் ஷேக் போலி எண்கெளன்டர், துள்சி பிரஜாபதி போலி எண்கெளன்டர், சித்திக் ஜமால் போலி எண்கெளண்டர் ஆகிய வழக்குகளையும் நீதிமன்றங்கள் குஜராத் போலீசாரை நம்பாமல் சிபிஐக்கு மாற்றின. இப்போது இஷ்ரத் ஜகான் போலி எண்கெளன்டர் வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

சோரபுதீன் எண்கெளன்டர்-குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்:

இதற்கிடையே சோரபுதீன் ஷேக் போலி எண்கெளன்டர் வழக்கில் போலீசார் இடையே நடந்த உரையாடல் தொடர்பான சிடிக்களை சிபிஐயிடம் வழங்காததற்காக முதல்வர் நரேந்திர மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த போலி எண்கெளன்டரில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் செல்போன் பேச்சு விவரங்கள் அடங்கிய சிடிக்களை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதுவரை அந்த சிடிக்களை குஜராத் அரசு சிபிஐயிடம் வழங்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் டிசம்பர் 7ம் தேதிக்குள் சிபிஐயிடம் அந்த சிடிக்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்
டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக